கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்று வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் 2023 ஆம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி பாசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் வே.லக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
இன.நில.வள,பொருளாதார கல்வி ரீதியான சகல துறைகளிலும் எமது சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகவுள்ளது.எமது சமூகத்தின் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதிலே மாற்று சமூகத்தின் அரசியல்வாதிகள் ஒரு ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் மாற்று சமூக அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக கைப்பொம்மைகளாக எடுபிடிகளாக செயற்படுபவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகளாகும்.
தமிழ் தேசியம் என்ற போர்வையில் போலித் தேசியம் பேசுகின்ற இவர்கள் இன இருப்பை கடந்த 7 தசாப்த்தங்களுக்கும் மேலாக கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்ற ஜதார்த்தமான உன்மை என்றார்.
மேற்படி நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக ஆலய குரு சிவஸ்ரீ ப.கண்ணன் கிராமசேவகர் திருமதி குமாரவேல், கல்லுரி அதிபர் த.தியாகேஸ்வரன்,மற்றும் பழைய மாணவர் சங்க உப தலைவர் வணக்கத்திற்குரிய போதகர் கு.இலஷ்மணகாந்,சமூக ஆர்வலர் த.நிர்மலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.