
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாளை (3) யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி வடமராட்சி கரையோரங்களில் 3 நாட்களாக இடம்பெற்ற போராட்டங்கள், நாளை யாழ் நகரிற்கும் விஸ்தரிக்கப்படுகிறது.
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் சங்கங்களின் பங்குபற்றலுடன் நாளை யாழ் மாவட்ட செயலகம் முடக்கப்படவுள்ளது.
காலை 7 மணி தொடக்கம் மீனவர்கள் மாவட்ட செயலக வாயில்களை மூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
வடமராட்சி கரையோரங்களில் அதிக மீன் பிடிபடும் பருவம் நிலவுவதால், இந்திய ரோலர் மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன.
இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வலைகள் அறுபடுவதுடன், உயிரிழப்புக்களும் நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.