
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று திட்டமிட்டு இடம்பெற்ற இனவாத செயற்பாட்டிற்கு எதிரான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் வை.எஸ்.எம். சிஹான் தெரிவித்துள்ளார்.
இன்று (02) ஊடகங்களுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
2017 இல் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய கலாசார ஆடையுடன் சென்ற ஆசிரியைகளை பலவந்தமாக அந்த பாடசாலை சமூகம் வெளியேற்றி இருந்த நிலையில், அண்மையில் கல்வியமைச்சினால் குறித்த கலாச்சார ஆடையுடன் ஆசிரியைகள் பாடசாலையில் கடமையாற்றலாம் என்ற தீர்வுக்கு அமைவாக இன்று குறித்த ஆசிரியை பாடசாலைக்கு சென்ற வேளையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக அறியக்கிடைத்தது. இந்த நாட்டிலே வாழ்கின்ற மத நல்லிணக்கத்தினை நேசிக்கும் அனைவருக்கும் மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களை எங்கோ இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே சமூகத்திற்கிடையில் பாரிய பிளவுகளை உண்டுபன்னி அதில் பெரிய அளவில் அரசியல் இலாபம் தேடமுற்படும் ஒருசிலரே மக்களை பகடைகளாக மாற்றி இவ்வாறான இனவாதத்தினை தூண்டுவதற்கு வித்திடுகின்றனர்.
இவ்வாறான செயல்பாடுகளை பொதுமக்களாகிய நாம் அனைவரும் நன்கு உணர்ந்து சகோதரத்துவத்துடனும், மற்றும் எமது பல்லாண்டு காலமான உறவுகளை இவ்வாறான கொடிய எண்ணங்களை கொண்ட மத வெறிபிடித்தவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
சிறந்த ஆசியர்களினாலேயே ஒரு கல்விச்சமூகம் உருவாகி எமது சமூகமும் நாடும் முன்னேற வழிவகுக்கும். எனவே ஆசியர்களை மதித்து கண்ணியப்படுத்தும் எதிர்கால சந்ததியினரே எம் சமூகத்திற்கு தற்போது அவசியமானதொன்றாகும். அதனை நாம் அனைவரும் நன்கு உணர்ந்து எமது எதிர்கால சந்ததியினரை வழிநடத்த வேண்டும்.
இலங்கையை பொருத்தமட்டில் பல அரச பாடசாலைகளில் பற்பல மதத்தினை கற்பிக்கும் பல்வேறுபட்ட ஆசியர்கள் சுதந்திரமாக தங்கள் கடமைகளினை எந்தவித இடர்களுமின்றி கண்ணியமாகவும் கௌரவமாகவும் செய்துவருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பாடசாலையில் மனித உரிமையை மீறும் இந்த திட்டமிட்ட செயற்பாடானது கண்டித்தக்க மற்றும் தண்டனைக்குமுரிய குற்றமாகும்.
உங்களின் இந்த அறிவீணமான இனவாத செயற்பாட்டினால் நாட்டில் சகோதரத்துவத்துடன் பழகும் பல ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகுந்த வெறுப்பினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை இவ்வாறான இனவாத செயற்பாட்டினை முளையிலேயே கிள்ளி எறிய மக்களும் அரசாங்கமும் முன்வரவேண்டும்.
மேலும் சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று திட்டமிட்டு இடம்பெற்ற இனவாத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியைக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றும் இதன் பின்னணியில் இருந்து செயற்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் .