
புது டெல்லி, பெப் 3: அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் கடந்த மாதம் 19-ம் தேதி சீன ராணுவத்தினாரால் கடத்தப்பட்டார். பிறகு 9 நாட்கள் கழித்து ஜனவரி 27-ம் தேதி மிரம் தரோனை சீனா ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.
இதையடுத்து தற்போது பேட்டியளித்துள்ள மிரம் தரோன், சீன ராணுவம் தன்னை கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்ததாக திடுக்கிடும் குற்றசாட்டை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சீன ராணுவ வீரர்கள் என்னை கைகளைக் கட்டி, காட்டிற்குள் அழைத்துச் சென்றனர். பின் முதல் நாள் அன்று என்னை சித்திரவதை செய்தார்கள். என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொடுமை செய்தனர். நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் இரண்டாவது நாளிலிருந்து என்னை சித்ரவதை செய்யவில்லை.
என் கைகளில் விலங்கிட்டு, என் தலையை துணியால் மூடினர். பின்னர் என்னை அவர்களுடைய ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். என்னை அடித்தார்கள், ஆனால் உணவும் தண்ணீரும் கொடுத்தனர்.
இவ்வாறு மிரம் தரோன் தெரிவித்துள்ளார்.