கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கிய இலங்கை: நெருக்கடிகளுக்கு யார் பொறுப்பு?

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆனால், நாட்டு மக்கள் எதிர்கொண்டிருக்கும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறான ஆடம்பரம் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தக் கேள்விக்கான வலுவூட்டல் அதிகரித்துள்ளது. இவற்றை மையப்படுத்தியதே இன்றைய நிஜத்தின் நிழல்.

கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கருத்திற் கொண்டு 74 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள இம்முறை பொது மக்களுக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கப்படவில்லை. சுதந்திர தின அணிவகுப்புக்கள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பாகும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

74 ஆவது தேசிய சுதந்திர நிகழ்வினை சுதந்திர சதுக்கத்தில் நாளை 4ஆம் திகதி கௌரவமான முறையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்கின்றார்.

இந்நிலையில், சுதந்திர தின வைபவத்தின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த நடவடிக்கை பல தரப்பினராலும் பெரும் வரவேற்பிற்கு உட்பட்டது.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நடைமுறை நீக்கப்பட்டது. இதற்குப் பல தரப்பினராலும் கண்டனமும், அதிருப்தியும் வெளியிடப்பட்டது.

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வருடமாவது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுமா என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, ‘அது குறித்த எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேள்விக்கு தற்போது என்னால் பதிலளிக்க முடியாது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் அதேவேளை, கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி வடக்கில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடக்கு – கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் இளைஞர் – யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் பேருந்து சங்கங்கள், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுக் கொண்டு செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கான சுதந்திரம் கிடைக்காத நிலையிலேயே நாம் இதுவரை போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் எமது உரிமையை இழந்திருக்கின்றோம், உறவுகளை இழந்திருக்கின்றோம்.

எனினும் உணர்வுகளை இழக்கக்கூடாது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தலயாய கடமை என்பதை புரிந்துகொண்டு குறித்த போராட்டத்தில் ஒன்றிணைந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாம் அனைவரும் ஒருமித்து குரல்கொடுத்தாலேயே எமது உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து இன்று காலை யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ- 9 வீதியை முடக்கிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறும் இந்தியப் படகுகளை பறிமுதல் செய்யக்கோரியும் உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஏ – 9 வீதி ஊடாக வருகின்ற வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறி வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வருகைதந்து ஆதரவளித்துள்ளார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இடத்திற்கு பல தரப்பினரும் வருகை தந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையிலேயே சிறீதரனும் போராட்ட இடத்திற்கு நேற்றைய தினம் இரவு வருகைதந்து ஆதரவளித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சுதந்திரத்தை சகலரும் அனுபவிக்குமளவில், புதிய அரசியலமைப்பும் ஆட்சியும் இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் சகல பிரஜைகளுக்கும் உரித்தான உரிமை. பெரும்பான்மை சமூகத்தவர் மாத்திரம் இதன் பலன்களை அனுபவிப்பது பாரபட்சமாகவே அமையும் எனவும் கூறியுள்ளார்.

சகல சமூகங்களையும் கௌரவிக்கும் வகையில் தான் இந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

நமது நாட்டின் சுதந்திரத்தை பெறுவதற்காக நாட்டிலே உள்ள பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய தலைமைகள் ஒரு குடும்பமாக நின்று போராடி பெற்றதுதான் நமது சுதந்திரம்.

ஆனால், சுதந்திரத்தின் பிறகு, ஒருசில பேரினவாத சக்திகள் அதை மறந்து செயல்படுவதை வேதனையோடு இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

அதேபோன்று, சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே நமது நாட்டிலே இருக்கக் கூடிய, எல்லா மதத்தவர்களையும் மதிக்கக்கூடிய வகையிலான தனியார் சட்டங்களைக் கூட இன்று இல்லாமலாக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்ற இனவாதிகளையும் நாங்கள் பார்க்கிறோம்.

அவ்வாறான இனவாதிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, அண்மைக்காலமாக இந்த நாட்டின் நிம்மதியை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை இல்லாமலாக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுபான்மையினர் என்பதற்காக அவர்களை ‘நாட்டின் விசுவாசிகளில்லை’ எனக்காட்ட முயலும் சக்திகள், நமது தாய் நாட்டின் கௌரவத்தையே சிதைக்க முனைகின்றன.

அத்துடன், பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற மோசமான ஒரு சட்டத்தின் மூலம், சிறையிலே வாடுகின்ற பல நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர், யுவதிகளுக்கு நீதி கிடைப்பதற்கும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் எம்மாலான பங்களிப்புக்களை செய்ய இத்தினத்தில் உறுதிபூணுவோம் என்று தெரிவித்துள்ளார்.

சிங்களப் பெரும்பான்மை மேலாதிக்க சக்திகளால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இப்போதும் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அடக்குமுறைகள் அட்டூழியங்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியில் தெற்கு மாணவர்கள் மீது ஏவப்பட்டிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராகம மருத்துவபீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொடுவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 23 வயதுடைய அவிந்த ரந்தில ஜெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

குறித்த சந்தேக நபர் நேற்றிரவு தனது சட்டத்தரணியூடாக ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சொகுசு காரும் களுபோவில பகுதியில் வைத்து ராகம பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி இச் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை மொத்தம் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீட வளாகத்தில் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் நேற்று அதிகாலை குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுடன், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் சகாக்கள் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தெற்கிலே மாணவர்கள் பிரச்சினை வடக்கிலே மீனவர்கள் பிரச்சினை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராஜபக்ஷ தரப்பிலிருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை வீசியுள்ளது.

இந்நிலையில் யுத்த காலத்தில் ஆயுதம் பெற்றதை தற்போது விவரித்தால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். ஆகவே இவ்விடயம் குறித்து பேசாமல் இருப்பது இரு தரப்பிற்கும் சிறந்ததாக அமையும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் கறுப்புச் சந்தை ஊடாக வடகொரியாவிடமிருந்து ஆயுதம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் விடயத்தை பற்றிப் பேசவும், விவரிக்கவும் விரும்பவில்லை. ஏனெனில் அது சர்வதேச மட்டத்தில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும்.

இவ்விடயம் குறித்து பேசாமல் இருப்பது இரு தரப்பிற்கும் சிறந்ததாக அமையும். ஜெனிவா விவகாரம் காலம் காலமாக பேசப்படுகின்றது. எமது ஆட்சியில் இறுதித் தீர்மானத்தை காண எதிர்பார்த்துள்ளோம்.

யுத்தம் நிறைவு பெற்ற காலத்திலிருந்து ஜெனிவா விவகாரம் பேசப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறந்த முறையில் இப்பிரச்சினை எதிர்கொள்ளப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜெனிவா விவகாரம் கையாண்ட விதம் மாற்றியமைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜெனிவா விவகாரத்திற்கு இறுதித் தீர்வைக் காண நாகரிகமான கொள்கையை வகுத்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்திற்கு சுமூகமான இறுதித் தீர்வை நிச்சயம் காண்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங் கொடுத்திருக்கின்றது. ஆனால் இதன் உண்மை நிலைமையை வெளிப்படுத்தி அதற்குத் தீர்வுகாண அரசாங்கம் தயாராக இல்லை.

அத்துடன் நாட்டில் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி ஒரு மாத காலத்திற்கும் போதாது. அதனால் உணவு மாத்த்திரமல்லாது மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருட்களின் விலை இப்போது 9 மடங்கு அதிகரித்துள்ளது. 40 தங்க காசுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி 600 தங்க காசுகள் வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் பாரியதொரு வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டு உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையிலேயே நாளை நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அரச தலைவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் திளைத்துள்ளனர். ஆனால் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *