
இலங்கையில் தேசிய வைத்தியசாலையில் கொரோனாத் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 325 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 75 நோயாளிகளுக்கு ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருத்துவர் ஹர்சா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த நிலைமையை விட இது குறைவாக இருந்தாலும், டெல்டா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளிடம் இனங்காணப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் நோயின் அறிகுறி குறைவாக காணப்பட்டாலும், அக் குறைவான அறிகுறி யாருக்கு காணப்படுகிறது என்று யோசிக்க வேண்டும்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை. சிலர் முதலாவது தடுப்பூசி மட்டும் பெற்றுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி பெற்று வயதானவர்கள், வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசி பெற்ற இளம் வயதினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் நாம் தடுப்பூசியின் அவசியம் பற்றி அறிய முடிகின்றது.
ஒமிக்ரான் தொற்று வீரியம் தடுப்பூசி பெற்றவர்களிற்கு மாத்திரமே குறைவாகக் காணப்படுகின்றது. பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் தாக்கம் குறைவாகக் காணப்படுகின்றது.
மூன்றாவது தடுப்பூசி பெற்றால் மாரடைப்பு ஏற்படுமா என்ற பயம் பலருக்கு உள்ளது. இத் தடுப்பூசி பெற்றால் மாரடைப்பு போன்றவை ஏற்படாது. ஆனால் வயதானவர்களிற்கு தடுப்பூசி பெற்று ஒரு மாதகாலத்தில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் அது தடுப்பூசியினால் அன்றி, சாதரணமாக அவர்களுக்கு வேறு நோய் காரணி காணப்பட்டால் இவ்வாறு ஏற்படும்.
எனவே பூஸ்டர் தடுப்பூசியை கண்டிப்பாக பெற்று கொள்வது சிறந்தது.- என அவர் தெரிவித்துள்ளார்.