இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் – எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை! SamugamMedia

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் கொழும்பில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதற்கமைய குறித்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட கொழும்பின் நிலப்பரப்பில் க்ரிஷ், ஹயட் போன்ற கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதால் பாரிய அநீதி ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாந்து இங்கு சுட்டிக்காட்டினார். எனவே, இவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளை கொள்வனவு செய்தவர்களிடமிருந்து தவணைகளை அறவிடுவதில் சில சலுகைவாய்ந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதிகார சபையின் நிதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply