
யாழ்ப்பாணம், பெப் 4: யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 80 லீட்டர் கசிப்பு, 17 பீப்பாய் கோடா, 21 லட்சத்து 87 ஆயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுளளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தெல்லிப்பளை பொலிசார் கடந்த முதலாம் திகதி காலை சம்பவ இடத்தில் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
இதனையடுத்து பாழடைந்த வீடு ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்த, 80 லீட்டர் கசிப்பு, 17 பீப்பாய் கோடாவை கைப்பற்றினர்.
தொடர்ந்து குறித்த பாழடைந்த வீட்டிற்கு அண்மையில் காணப்பட்ட பற்றை காட்டினுள்ளும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 இலட்சத்து 87 ஆயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.
இதன்போது, 24, 25 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்தது, விற்பனையில் ஈடுபட்டடது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கடந்த 2 ஆம் திகதி ஆஜர்படுத்திய நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.