
கொழும்பு, பெப் 4: நேற்றிரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதரட மெனிகே ரயிலில் இருந்து பிரான்ஸ் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற அவருடன் பயணித்த காதலன் குதித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தெரிய வருவது: நேற்றிரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதரட மெனிகே ரயிலில் தனது துணையுடன், ரயிலின் ஃபுட்போர்டில் நின்றவாறு பயணம் செய்த பெண் ஒஹியா மற்றும் இடல்கசின்ன ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்த காதலியை காப்பாற்றும் முயற்சியில் அப் பெண்ணின் காதலன் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இதனைப் பார்த்த ரயிலில் இருந்த மற்ற பயணிகள் ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவத்தில் சிறிய காயங்களுக்கு உள்ளான பிரான்ஸ் பிரஜைகள் இருவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.