
நாட்டில் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் பரவலான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், சுதந்திரதினத்திற்கு ஆதரவாக யாழ் நகரில் பேரணியொன்று இடம்பெற்றது.
பெருமெடுப்பில் வெளிநபர்களை களமிறக்கி இந்த பேரணியும், கேளிக்கை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
யாழ். பண்ணை பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டவர்கள் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து, பின்னர் வீரசிங்கம் மண்டபத்திற்கு சென்றனர்.
சுமார் 40 முச்சக்கர வண்டிகள், 80 மோட்டார் சைக்கிள்களும் பேரணியில் பங்கேற்றது.
இதற்காக மிகப்பெருமெடுப்பிலான ஒலி, ஒளி அமைப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது இலங்கை என்ற தாய்திருநாட்டில் ஒற்றுமையாக பயணிக்கூடிய சூழல் இங்கு நிலவுகின்றது.
அரசியல் ரீதியாக எம்மை பிளவுபடுத்தும் தமிழ் தலைமைகளை நிராகரிப்போம்.
குறுந்தேசிய வாதம் பேசும், குறுகிய இனமாக பேசும் தமிழர் அரசியல் தலைமைகளுக்கு இனிமேல் யாழ்ப்பாணத்தில் தமிழ் பிரதேசங்களில் இடமில்லை என்பதை எமது ஒற்றுமை மூலம் நாம் பறைசாற்றுகின்றோம்.
இந்த நாட்டை எவரும் பிரிப்பதற்கு, மிதிப்பதற்கும் அனுமதியளிக்க மாட்டோம்.
நாம் இங்கு முழு உலகத்திற்கும் சர்வதேசத்திற்கும் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்,
குறும் தமிழ் தேசியவாதிகள் கூறுவது போல இங்கு மதங்களுக்கு இடையிலோ, இனங்களுக்கு இடையிலோ, சாதாரண மக்களுக்கு இடையிலோ பிணக்குகள் கிடையாது. இங்கு அரசியல் தலைமைகளாலையே பிணக்குகள் உருவாக்கப்படுகிறது.
உலக நாடுகளில் தமது நலன்கள் சார்ந்து இயங்கும் சக்திகளுக்காகவும், உள்நாட்டில் தமது வயிறு வளக்க அரசியலை செய்யும் ஒருசில அரசியல் வாதிகளும் இந்த நாட்டை படுகுழியில் தள்ள வேலை பார்ப்பது எமக்கு தெரியும்.
ஆகவே வெளிநாட்டு அந்நிய சக்திகளுக்கு எதிராகவும், உள்நாட்டு தேசவிரோத சக்திகளுக்கு எதிராகவும், நான் கூடியுள்ளோம் என்றனர்