6 அடி தூரத்திற்கு பின்னோக்கி நகர்த்தப்பட்ட 52 அடி உயர கோபுரம்

ஆந்திரா, பெப் 4: ஆந்திராவில் 52 அடி உயர கோவில் கோபுரம், எந்தவித சேதமும் இன்றி 6 அடி தூரம் பின்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டதால் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சிவகோடி ஸ்ரீபீடம் மஹாலக்ஷ்மி கோவில் உள்ளது. இந்தக் கோவில் கடந்த 2005-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த கோவில் 52 அடி உயரத்தில் கோபுரம் உள்ளது. கோபுரத்தின் மீது 23 அடி உயர லலிதா காமேஸ்வரி சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அனந்தபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் கோவிலை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கோவிலை இடிக்காமல் பின் நோக்கி நகர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து விஜயவாடாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தை கோவில் நிர்வாகிகள் அணுகினர்.

ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ஜாக்கிகள் கொண்டு கோவிலை நகர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. கோவில் கோபுரம் 500 டன் எடை கொண்டது என்பதால் பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி சிறிது சிறிதாக கோபுரத்துக்கு அடியில் ஜாக்கியை பொருத்தினர்.

கோபுரம் நகர்த்தும் பணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டுமென கோவிலில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

இதையடுத்து ரூ.40 லட்சம் செலவில் கோபுரத்திற்கு அடியில் 350 ஜாக்கிகள் பொருத்தப்பட்டு சிறிது சிறிதாக 6 அடி தூரத்திற்கு கோவில் கோபுரம் பின்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டது.

கோவில் கோபுரம் எந்தவித சேதமும் இன்றி பின்னோக்கி நகர்த்தி வைக்கப்பட்டதால் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *