தமிழர்களை விரட்டும் நடவடிக்கைகள் சிங்கள அரசியல்வாதிகளாலும் உயர் மட்ட அரச அலுவலர்களாலும் நன்றாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆதிலிங்கேஸ்வரர் கோயிலின் மூலவர் திட்டமிட்டு திருடப்பட்டுள்ளார் என்று சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், .
தொல்பொருள் திணைக்களம் வடகிழக்கில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாகக் கூறி பிற மத வணக்கஸ்தலங்களை அழித்து வருகின்றார்கள். முக்கியமாக இந்து மக்களின் வணக்கத் தலங்களும் சிலைகளுமே அவர்களின் இன ரீதியான வெறியாட்டத்திற்கு ஆளாகியுள்ளன. நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்த ஆதிலிங்கேஸ்வரர் கோயிலின் மூலவர் திருடப்பட்டுள்ளார். மற்றைய சிலைகளும் திருடப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. அந்த இந்துக் கோவில் இருந்த இடத்தில் வட்டமான பர்வத விகாரை உருவாக்கப்பட்டு கூகிளிலும் குறித்த பௌத்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் 2000 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பௌத்த வணக்கஸ்தலம் குறித்த இடங்களில் இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்தக்கால கட்டத்தில் சிங்கள மொழியோ இனமோ இன்னமும் உருவாகவில்லை. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளில்தான் சிங்கள மொழி, தமிழ் – பாளி மொழிகள் சேர்க்கையால் பிறந்தது. அந்த மொழியை பேசியவர்களே சிங்களவர்கள். கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த உலகத்தில் சிங்களம் என்ற மொழியோ சிங்களவர் என்ற இனமோ இருந்ததில்லை.
இப்பொழுது தமிழ் பௌத்தர்களால் வழிபட்ட புத்த ஆலயங்கள் நவீன சிங்கள பௌத்தர்களின் ஆலயங்களாக புனர்நிர்மாணம் பெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.