வடக்கு, கிழக்கில் தீவிர சிங்கள மயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்காக முப்படையினர் களப்பிறக்கப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நேற்றையதினம்(04) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய கஜேந்திரன்,
தமிழர்களின் இன, மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற செயற்பாடுகளும், மத, கலாசார அடையாளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளும் தீவிரமனாக முன்னெடுக்கப்படுகின்றன என்று செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய, அண்மையில் கருநாட்டுக்கேணி பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பெரும்பான்மையின மக்களை குடியமர்த்துவதற்கான முயற்சி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிராக தமிழ் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி, முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் சிங்கள மீனவர்கள் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபடுவதுதான், தற்பொழுது அங்கு சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், முப்படையினரையும் களமிறக்கி வடக்கு, கிழக்கில் தொன்மையான வரலாறுகளை அழித்து சிங்களமயமாக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.