வலி- வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று மாலை முதல் விகாரை அமைந்துள்ள பகுதியில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இணைந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஏதுவாக பந்தல்கள் அமைக்க முற்பட்ட போது அங்கிருந்த பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் தற்போது விகாரையின் வாயில் பகுதியில் இருந்தவாறு போராட்டகாரர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போது குறித்த பகுதியில் ஏராளமான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.