திருகோணமலையில் மாபெரும் தொழில் மற்றும் தொழிற்கல்வி சந்தை! samugammedia

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலை வாய்ப்பு பிரிவு,  திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் மற்றும் தொழிற்கல்வி சந்தையானது இன்று (09) தி/பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

தொழில் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல்கள் தொடர்பில் சரியான ஆலோசனைகளைப் பெற்று திறன்களை விருத்தி செய்வதன் மூலம் தமது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ள முடியுமென  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளையர், யுவதிகளுடைய திறனை விருத்தி செய்யும் நோக்கில் பல அமைச்சுகள் இணைந்து பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறானதொரு வேலைத்திட்டமாக இவ் வேலைத்திட்டம் இன்று நடாத்தப்படுகின்றது. இதன் மூலம் உயரிய பலனை பெற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வெற்றி கொள்ள ஏற்புடையதாக்கிக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் இதன் போது  மேலும் வேண்டிக் கொண்டார்.

இவ் வேலைத்திட்டத்தில் உள்ளூர், வெளியூர் தொழில் தருனர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம் மாபெரும்  தொழில் மற்றும் தொழிற்கல்வி சந்தையானது இளைஞர் , யுவதிகள், தொழில் தேடுபவர்கள், தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான தகவலை பெற விரும்புவர்கள்,பாடசாலை மாணவர்கள்,  பாடசாலையை விட்டு இடை விலகியோர், என அனைவருக்கும் பயன் பெறும் வகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.கனகசூரியம், கிழக்கு மாகாண பிராந்திய மத்திய வங்கி முகாமையாளர் க.பிரபாகரன், மனித வள மற்றும் வேலைவாய்ப்பு துறை உதவிப் பணிப்பாளர்( நிர்வாகம்) என்.சஞ்ஜீவன், திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாவட்ட இணைப்பாளர் க.மதுரன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு மாவட்ட இணைப்பாளர் கு.ரமணபிரசாந்த், மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் ஜெசினா பஹ்மி, திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *