வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றைய தினம்(09) காலை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், யாழ் பல்கலை மாணவர்களுடன் இணைந்து பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான செயற்பாட்டினை மேற்கொண்டனர்.
இவ்வாறானதொரு நிலையில் பொதுமக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பிடி அரிசி மற்றும் இதர பொருட்களை சேகரித்தனர்.
அது மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் வழங்குதல் வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வீடுகளிற்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் சிரட்டை திரட்டப்பட்டுள்ளது.
திரட்டப்ட்ட சிரட்டைகளை கஞ்சியினை விட்டு பரிமாறுவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கிளிநொச்சி வாழ் தாய் குலங்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.