யார் தலைவராகினாலும் நானும் சிறீதரனும் ஒன்றாகவே பயணிப்போம் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முள்ளிவாய்க்காலில் வைத்து தெரிவித்துள்ளார்.
இன்று 14ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு காலை 10:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வினை முடித்துவிட்டு இருவரும் ஒன்றாக வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி, மணிவண்ணன், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பேராசிரியர் சிவநாதன் உடன் நின்று கொண்டு நீங்கள் இருவரும் ஒன்றாகவே திரிகிறீர்கள் யார் தலைவராக போகிறீர்கள் என வினவினார்.
இதற்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், யார் தலைவராகினாலும் ஒன்றாகவே பயணிப்போம். உங்களையும் எங்களுடன் வந்து சேருமாறு தானே கேட்டோம். சேர்ந்தால் உங்களிடம் தலைமையை தந்து விட்டு நாங்கள் செயல்படலாம். உங்கள் கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் ஐயா எங்களுடன் தானே வர போகின்றார் என புன்னகையுடன் கூறி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றார்.
