கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை விநியோகம்! samugammedia

மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று (08.06.2023) வியாழக்கிழமை  மட்டக்களப்பு, பாலமீன்மடு மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுதாகரன் சியாந் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக 86 மீனவர்களுக்கு தலா 75 லீட்டர்படி இலவச மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா, மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர் நற்குணநாதன் பத்மநாதன் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் என்போர் கலந்துகொண்டனர்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில்  சீன அரசின் நிதியுதவியின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1,796 கடற்தொழிலாளர்கள் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தெரிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கான இலவச எண்ணை விநியோக திட்டமானது மட்டக்களப்பு மாவட்டதின் பல்வேறு பகுதிகளிலும் கட்டம் கட்டமாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *