16 மாணவிகள் துஷ்பிரயோகம்..! ஆசிரியர் தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு! samugammedia

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 26ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், சந்தேகநபரை இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, மீளவும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *