உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையில் வெளியானது – இலங்கையின் உண்மையான முகம் – சுரேஸ்..! samugammedia

இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவது தொடர்பில் கண்துடைப்புச் செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர்  சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்ப்பதனால் அது இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ள அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா. உயர்ஸ்தானிகர், அவரது வாய்மூலமான அறிக்கையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறிவந்தாலும், பொறுப்புக்கூறுவதற்கு தயாரில்லாத நிலையிலேயே உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, போரின்போதும், அதன் பின்னரும் அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து, பொதுமக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கிறது என்பதையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில், இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவது தொடர்பில் கண்துடைப்புச் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. 

அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தினை ஏமாற்றும் வகையில் சில பேச்சுக்களை முன்னெடுத்து காலங்கடத்துகிறது.

இவ்விதமான பிற்போக்குச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தினை இனங்கண்டு ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

எனினும், தற்போதைய சூழலில் ஐ.நா.வும், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தீர்மானத்தினை கொண்டுவந்து நிறைவேற்ற, இணை அனுசரணை நாடுகளும், 

ஏனைய சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமாகிறது. இலங்கை பொருளாதார, அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.

இதிலிருந்து மீள்வதாக இருந்தால் குறித்த செயற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்தும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதோடு நிற்காமல், அதற்கான செயல்வடிவங்களை முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை வலுவாக பிரயோகிக்க வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *