அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தலவாக்கலையில் இன்று (28) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு விண்ணப்பத்தில் கோரப்பட்ட தகுதி இருந்தும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பலர் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும் இவ்வாறான போலி திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் மக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தாலே போதுமானது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் இவ்வேலைத்திட்டத்தினால் மக்கள் பாரிய ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கருத்து வெளியிட்டனர். பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டனர்.

