டயகம நகரில் புதிதாக மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்! samugammedia

டயகம நகரில் புதிதாக மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இன்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நான்காவதாக ஒரு மதுபானசாலை ஆரம்பிக்கப்படுவது அநாவசியன ஒன்றாக இருக்கின்ற அதே வேளையில் இந்த பிரதேச மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கும் செயற்திட்டமொன்று என விசனம் தெரிவிக்கின்றனர்.

கறுப்பு கொடி கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி பொது மக்களும் மாணவர்களும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதே நேரத்தில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 டயகம நகரில் 200 மீட்டருக்கு ஒரு மதுபானசாலை அமைக்கப்படுவது குறித்து பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வீதியோரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மதுபானசாலைக்கு அருகில் லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. அதில் 200க்கும் அதிகமானோர் வசித்து வரும் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களும் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறித்த மதுபானசாலை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்தும் படி இங்குள்ள பொதுமக்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

டயகம நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் மேற்கு 3ம் பிரிவில் இருக்கும் வைத்தியசாலை வரை சென்று மீண்டும் நகரத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள் மதுபான சாலை அருகில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் மத குரு தலைவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், வர்த்தகர்கள் என பலரும் இணைந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *