மட்டக்களப்பில் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான மதுபானசாலைகள் அதிகரிப்பு – சாணக்கியன் விசனம்! samugammedia

பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் சூழ்நிலையில் சுற்றுலாத்துறையினை காரணம்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இந்த நிலையில் மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மிகமோசமானதாக மாறியிருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கவேண்டும் என்ற பொய்யான விடயத்தினை வைத்துக்கொண்டு புதிதாக மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் சிலர் முன்னெடுப்பது என்பது கவலையான விடயம்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவானது உண்மையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிக தொகையினைக்கொண்ட பிரதேசமாகும்.இந்த பிரதேசத்தில் மட்டும் மூன்று புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது.அப்பகுதியில் உள்ள மக்களை இன்னும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

மாவட்டத்தில் பொருளாதாரத்தினை அழித்துக்கொண்டு வெறுமனே அபிவிருத்தி என்னும் பெயரில் வெறும் இரண்டு வீதிகளுக்கு கல்லையும் மண்ணையும் கொட்டி மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சுற்றுலாத்துறையில் அபிவிருத்திசெய்வது என்றால் பல விடயங்கள் இருக்கின்றது செய்வதற்கு.நாங்கள் அதனை பாராளுமன்றத்தில் பல தடவைகள் கூறியிருக்கின்றோம்.ஆனால் அதனை எதனையும் செய்யாமல் மதுபானசாலைகளை கொண்டுவருவதன் மூலம்தான் சுற்றுலாபயணிகள் அதிகரிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளதுமுடியாது.

இதில் இன்னும் கவலையான விடயம் பெரும்பான்மையின மக்களின் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் மதுபானசாலைகளை இங்கு கொண்டுவந்து அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அவ்வாறானால் சிங்கள மக்கள் நல்லா வாழவேண்டும்,தமிழ் மக்கள் குடித்து நாசமாக போகவேண்டும் என்று எண்ணுகின்றார்களா?.

அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தோல்வடையந்துவருகின்றது.சுகாதார அமைச்சர் மருந்துவாங்குவதற்கு பணம் இல்லையென்கின்றார்.அவ்வாறானால் அவர் அந்த அமைச்சினை வைத்துக்கொண்டு என்ன செய்கின்றார்.இதேபோன்றுதான் கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாணத்தில் வேகமாக சில செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மட்டக்களப்பில் உள்ள சில இராஜாங்க அமைச்சர்கள் அவருடன் ஒட்டிக்கொண்டு பெயர் வாங்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.ஆளுனருக்கு வாலாக திரியாமல் இராஜாங்க அமைச்சருக்குரிய பொறுப்பினை நிறைவேற்றுங்கள்.

நாளைய தினம் இந்த மதுபானசாலைகளுக்கு எதிராக அடையாளமாக வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஏற்பாடுசெய்துள்ளோம்.இதற்கு மக்கள்ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *