வைத்தியசாலை உயிரிழப்புக்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம்! வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் போராட்டங்கள் ஊடாக, நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் சதித்திட்டமே மேற்கொள்ளப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளப்பட்ட நாளில் இருந்து. இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டது.

இதன் விளைவாக அரசாங்கத்தை கவிழ்த்து, ஜனாதிபதியும் அவர்கள் விட்டியடித்தார்கள்.

எரிபொருள் இல்லாமல் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

12 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு நீடித்தது. வீட்டுக்கு கொண்டுவந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தன.

இவ்வாறு பல பிரச்சினைகள் அன்று இருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்து ஒரு வாரத்திற்குள்ளேயே, நாட்டில் வரிசை யுகம் இல்லாது போனது. மின்வெட்டும் இல்லாது போனது. எரிவாயு சிலிண்டரும் எங்கும் வெடிக்கவில்லை.

ஒரு டொலர் கூட வராமல் எப்படி இது சாத்தியமாகும்? இப்போதும் இதேபோன்றதொரு சதித்திட்டம்தான் நாட்டில் அறங்கேறி வருகிறது.

மருந்துகள் விஷமடைவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு சதித்திட்டமாகும். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் தேடிப் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டை இல்லாதொழிக்கும் ஒரு குழுவினர், அரச சேவையிலும் உள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *