யாழ் கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையில் மாயமாகும் இரும்புகள்..!பிரதேச வாசிகள் மீது குற்றச்சாட்டு..! samugammedia

கடந்த இரண்டு மாதங்களில் காங்கேசன்துறை  சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மப்பிரிய தெரிவித்தார்.

தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால். சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைந்து இரும்பை எடுத்துச் செல்வதாகவும், இது தொடர்பாக பலமுறை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

தொழிற்சாலையில் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சொத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இராணுவத்தினரைக் குறைக்கும் வேலைத்திட்டத் தின் கீழ் படையினர் அகற்றப்பட்டதால். பாதுகாப்புக்கு அவர்களை ஈடுபடுத்துவதற்கு வழியில்லை.

அதன் விளைவாக சில நபர்கள் தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை வளாகத்தில் இரும்பைத் திருடுகிறார்கள். தொழிற்சாலையின் பல கட்டடங்கள் இரும்பால் கட்டப்பட்டுள்ளன. பல இலட்சம் ரூபா பெறுமதியான வளாகத்தில் அதிகளவிலான இரும்புகள் இருந்தன.

இரும்புத் திருட்டைத் தடுப்பதற்கும் பாதுகாப்புக்காகவும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் இவர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை எழுகின்றது.

இரும்பை கேள்விகோரல் மூலம் ஏலம் விடவேண்டும் என்ற நோக்கத்தில் 2019 இல் மூன்று அமைச்சகங்களின் செயலர்கள் தலைமையில் கேள்விகோரல் குழு ஏற்படுத்தப்பட்டபோதிலும், அந்தநடை முறைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் இரும்பை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் இடத்திலிருந்து அகற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *