மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை (22) சென்ற பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் இரு ஊடகவியலாளர் உட்பட 9பேர் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினரால் வழிமறித்து தடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று காலை மயிலத்தமடு பகுதிக்கு சகிதம் வாகனங்களில் சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல் 12 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது எல்லைபகுதியிலுள்ள கம்பி பாலத்தின் பகுதியில் பௌத்த தேரர் ஒருவருடன் அந்தபகுதி சிங்கள மக்கள் ஒன்றினைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை எடுத்து அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த இடத்திற்குச் சென்று ஊடகவியளாளர்கள் உட்பட ஏனையவர்கள் சேகரித்த செய்திகள் மற்றும் காணொளிகள் உள்ளடங்கிய விடயங்களை தொலைபேசியிலிருந்து கிராமவாசிகளின் அச்சுறுத்தலால் நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஊடகவியளாளர்கள் தமது அடையாள அட்டையை காண்பித்த போதும் அவர்களும் அச்சுறுத்தப்பட்டு அவர்களின் விபரங்களைப் பதிவு செய்தனர்.
இவற்றை விட குறித்த விடயம் பற்றி எவ்வித தகவல்களையும் வெளியிடக்கூடாது எனக் கூறி எழுத்து மூலமொன்றையும் பெற்றனர். இதைவிட இந்து மத குருவை குடுமியிலே பிடித்து தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு சிலரால் தடுக்கப்பட்டது.
மூன்று மணித்தியாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே அவ் இடத்திற்கு பொலிசார் வருகை தந்தனர்.
எம்மை சாணக்கியனின் ஆதரவாளர்களெனவும் குறித்த பிரச்சினை தொடர்பான தகவல்களுக்கு குறித்த இடத்திற்கு வந்ததாக பிக்கு உட்பட கிராமவாசிகளால் பொலிசாரிடம் பொய்க் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.
வாகனத்தில் வருகை தந்த அனைவரையும் வாகனத்தில் வைத்து தீ மூட்டி எரிப்போம் எனவும் சிலர் பயமுறுத்தி உள்ளனர். இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசார் அந்த பகுதிக்கு சவருகை தந்து விசாரணைகளினை நடாத்தினர்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றையதினம் பாராளுமன்றத்தpன் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.