மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழு, குழுக்களின் தீர்மானத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எம்.எம்.டி. நவாஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கைளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி சந்தித்து அவர் இந்த இடைக்கால அறிக்கையை கையளித்துள்ளார். மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை, இதற்கு ஈடான பாரதூரமான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் வெளிகொணர்ந்த தகவல் விசாரணை, அவற்றை அறிகையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி நீதியரசர் நவாஸ் தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.
இந்த ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திதிகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 107 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக போரை எதிர்நோக்கியவர்கள், போர் தொடர்பான அனுபவங்களை கொண்ட, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேரின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்ட விடயங்களை கவனத்தில் கொண்டு, சில பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்கள் பற்றி உடனடியாக விசாரணை நடத்தி, அது சம்பந்தமாக வழக்கு தொடர வேண்டும் அல்லது இழப்பீடுகளை வழங்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார ரீதியாக மேம்பட அரசின் உதவி அவசியம் என ஆணைக்குழுவில் சாட்சியம் வஙழ்கியவர்கள் கோரி இருந்ததுடன் அது தொடர்பான பரிந்துரையையும் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
பயங்கரவாதிகளை நினைவுகூர இடமில்லை என்பதுடன் போரில் உறவினர்கள் கொல்லப்பட்டிருந்ததால், அவர்களை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துக்கொண்டுள்ளார்.
