எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய 22 மீனவர்களுக்கும் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 26 தமிழக மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த மாதம் 14 ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் ஒருவர் ஒரு படகின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த படகினை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன் அந்த படகில் பயணித்த உரிமையாளர் உள்ளிட்ட நால்வரையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் ஏனைய 22 மீனவர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.