தாங்கள் தாக்கவில்லை என இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு பொலிஸார் மிரட்டல்…! சுகாஷ் தெரிவிப்பு…!samugammedia

சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிசார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

அவரோடு கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம் சென்று பொலிசார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை நாங்கள் நாளைய தினம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். இந்த இடத்தில் பாரிய ஒரு அச்சுறுத்தல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.

இங்கே குற்றம் இழைத்ததும் பொலிசார். அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அதே பொலிசார். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *