கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு…! மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்…!samugammedia

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மகஜர் கடிதத்தை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்தியமையினால் பொலிஸாருக்கும் கோரிக்கைகளை எடுத்துச் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம்   22 ஆம் திகதி எட்டு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை பொலிஸார் மூடியமையினால் இரு சாராருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அனைத்து வேலை செய்யும் அரச விசேட விடுமுறைகள் வார இறுதி நாட்கள் மட்டும் விடுமுறை நாட்களுக்கு கொடுப்பனவு வழங்குக, குறைக்கப்பட்ட உணவுகளை நோயாளிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குக, மேலதிக நேர எல்லையை 150 மணித்தியாலங்களாக மாற்றுக, ரேட் முறையில் மேலதிக நேர கட்டணத்தை வழங்குக, முறையான ஆட் சேர்ப்பு நடைமுறையை ஏற்படுத்துக, சம்பள உயர்வுகளை தாமதமின்றி வழங்குக, வரிச்சுமைகளை பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குக போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆளுநர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் இடை நிறுத்தியதாகவும் உரிமைகளை கோரும் போது பொலிஸார் பயமுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தங்களுக்கு பொதுமக்கள் தினத்தில் ஆளுநர் அலுவலகத்திற்குள் உள் நுழைய வேண்டாம் எனக் கூறுவது பொருத்தமற்றது எனவும் தங்களுக்கு தீர்வினை உடனடியாக பெற்றுத் தருமாறும் இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆளுநர் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு மகஜரையும் பரிசீலனை செய்து நாளை செவ்வாய்க்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறும் உயர் அதிகாரிகள் கூறியமையினால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இருந்த போதிலும் நாளைய தினம் சிறந்த தீர்வு கிடைக்காமல் தான் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் ஒன்றிணைந்த  சுகாதார ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *