மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பம்..!!

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் நாளை (19) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

முதற் கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் நாளை (19) நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம்  நடைபெறவுள்ளது.

இதன் பிரதான நிகழ்வு நாளை (19) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறும்.

அதே போல 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *