சமுதித வீட்டின் மீது தாக்குதல்; முன்னாள் திருமதி அழகி புஷ்பிகாவிற்கு பொலிஸ் அழைப்பு!

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் திருமதி இலங்கை அழகுராணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா இன்று காலை 10 மணிக்கு பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பிலியந்தலையில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது கடந்த 14ஆம் திகதி அதிகாலை கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே புஷ்பிகா டி சில்வா அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகாவுடன் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.

அதன்போது, அவர் திருமதி உலக அழகுராணி போட்டி மற்றும் அதில் பங்கேற்ற உள்ளூர் அமைப்பாளர்கள் தொடர்பான பல சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தினார்.

இந்த நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கையின் முதல் உலக திருமதி அழகுராணியான, ரோசி சேனநாயக்க, நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி புஷ்பிகாவுக்கு எதிராக நட்டஈட்டு கடிதமொன்றை அனுப்பினார்.

இதன் மூலம் புஷ்பிகா டி சில்வாவிடம் ஐநூறு மில்லியன் ரூபாவை அவர் நட்டஈடு கோரியிருந்தார்.

இந்தநிலையில், ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *