கல்வி நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்து தன்னையும் தனது சகோதரியையும் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலிய மறே தோட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி மற்றும் உயர்தர பிரிவில் கல்வி பயின்று வரும் தனது சகோதரி ஆகிய இருவரும் கடந்த 22 ம் திகதி தமது வீட்டில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, அதே பகுதியில் வசிக்கும் சில நபர்கள் சத்தம் இட்டு கல்வி நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தமையால் குறித்த சகோதரிகள் அதனை தட்டி கேட்டுள்ளனர்.
இதன் காரணமாக கோபம் அடைந்த குறித்த நபர்கள், இரண்டு மாணவிகளையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அன்றைய தினம் இரண்டு மாணவிகளும் நல்லதண்ணி.பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு மஸ்கெலிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்
ஆனால் இன்று வரை குறித்த நபர்கள் சம்பந்தமாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் புகார் தெரிவித்துள்ளனர்
குறித்த மாணவி எதிர்வரும் மாதம் இடம்பெற்றுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமை காரணமாக தனது அன்றாட கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டிய நிலையில் குறித்த நபர்களால் தனது கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து நல்லதண்ணி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.