யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இராஜேஸ்வரன் காலமானார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் இன்று காலமானார். 

1977ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது புவியியல் சிறப்புக் கலைமாணி பட்டத்தைப் பெற்ற பேராசிரியர், 1977, முதல் 1978 வரை பேராதனைப் பல்கலைக்கழக புவியியற்றுறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். 

பின்னர் 1979 ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் மறைந்த பேராசிரியர் வில்லியம் லூதர் ஜெயசிங்கம் துறைத்தலைவராக இருந்த போது இணைந்து கொண்டார்.

புவிவெளியுருவவியலிலும், படவரைகலையிலும், நிலப்பயன்பாட்டு திட்டமிடலிலும் தன்னுடைய சிறப்புத்துவத்தையும் கொண்டிருந்த பேராசிரியர் இராஜேஸ்வரன் இத்துறைகளில் பல ஆய்வு வெளியீடுகளை மேற்கொண்டிருந்தார். 

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் இராஜேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது புவியியல் சிறப்புக் கலைமாணி பட்டத்தினைப் பூர்த்தி செய்து, பின்னர் நெதர்லாந்து நாட்டில் உள்ள விமான அளவீடு மற்றும் புவிவிஞ்ஞானங்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் தன்னுடைய பட்டப்பின் டிப்ளோமாவையும், 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணியையும், கலாநிதி பட்டத்தினையும் நிறைவு செய்தார். 

2011 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டுவரை புவியியல் துறையின் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் இராஜேஸ்வரன், சிரேஸ்ட மாணவ ஆலோசகராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய இணைப்பாளராகவும் கடமை புரிந்தார். 

பேராசிரியர் இராஜேஸ்வரன், செய்முறைப் புவியியல், விமான ஒளிப்படங்கள், யாழ்ப்பாண குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுகளினதும் தோற்றம், Geography of Northern Province  ஆகிய நூல்களையும்   எழுதியுள்ளார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *