புத்தளத்தில் இணைப்பாடவிதான செயற்பாட்டில் இறங்கிய பாடசாலை மாணவர்கள்…!

புத்தளம் தெற்கு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 9 ஆம் தரம் மற்றும் 10 ஆம் தரம் மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்றிட்டத்தின் ஊடாக வகுப்பறையை அலங்கரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை அதிபர் பி.எம்.முஸ்னியின் ஆலோசனைக்கு அமைய, 9ஆம் தரம் மற்றும் 10 ஆம் தரம் வகுப்பாசிரியர்களின் மேற்பார்வையில் , பெற்றோர்களின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலை வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அப்பால் உடல் உள சமுதாய பண்பாட்டுவளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் மாணவர்களை பூரண மனிதனாக மாற்றும் செயற்றிட்டமே இணைப்பாடவிதான செயற்றிட்டமாகும்.

அந்த வகையில், 9 ஆம் தரம் மற்றும் 10 ஆம் தரம் மாணவர்கள், தங்களது வகுப்பறைகளுக்கு வர்ணங்களை பூசி, வகுப்பறைகளை அழகுபடுத்தி வருவதுடன், கதிரை மற்றும் கல்வி கற்கும் மேசை என்பவற்றிருக்கும் வர்ண நிறங்களை பூசி அழகுபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டிடங்களில் இலங்கையின் தேசிய குறியீடுகள், மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் , சமகாலச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதான கருத்து வெளிப்பாட்டுச் சித்திரங்களும் இங்கு வரையப்பட்டுள்ளன.

பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தலைப்பு மற்றும் ஓவியங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சித்திரப்பாட ஆசிரியராக முன்னர் கடமையாற்றி, தற்போது கடையாமோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரியில் சித்திரப்பாட ஆசிரியராக பணியாற்றி வரும் ஹரீஸ் அஹ்மட் குறித்த சித்திரங்களை வரைந்துள்ளார்.

குறித்த சித்திரங்களை வரைவதற்கு அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நிதி அணுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *