![](https://newuthayan.com/wp-content/uploads/2021/07/Mobile-Vaccination-for-Those-Who-Disabled-or-Unable-to-Leave-Due-to-Illness-1.jpg)
நோய்வாய்ப்பட்டு, வீடுகளை விட்டு வெளிச் செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தகவல்களைப் பெற்று, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில், கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இனங்காணப்பட்டுள்ள கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களில் அதிக சதவீதமானோர், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது தொடர்பில் அறிவூட்டுவது குறித்தும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
எந்தவொரு துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்குத் தடுப்பூசி ஏற்றும் எந்தவோர் இடத்திலும், இலகுவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, சுதேச ஔடதங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.