
அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரேனா பரவல் காரணமாக, இணையவழி முறைமையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதற்கமைய, அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சில கட்டங்களின் அடிப்படையில், தீர்வு ஏற்படும் வகையில், ஆசிரியர், அதிபர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று கூடி ஆராய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.




