“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்”- தீபம் ஏற்றி உறவுகள் கவனயீர்ப்பு

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்” என்ற வாசகத்தினை முன்னிறுத்தி  தீபம் ஏற்றி கவனயீர்ப்பு ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படையினரால்  கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட உறவுகளின் நீதியை வலியுறுத்தி, நேற்று (திங்கட்கிழமை) இரவு மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து மன்னாரில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்காக இணையத்தின் ஏற்பாட்டில் தீபம் ஏற்றி கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக வீடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளுக்கு நீதி வேண்டியும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு விரைவில் இந்த அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என  வலியுறுத்தியும் வீடுகளில் தீபம் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுத்தனர்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு, யுத்த காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் கடத்தப்பட்ட மற்றும் சரணடைந்த தங்கள்  உறவுகளுக்கு  நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *