மாகாண சபை தேர்தல்: கூட்டமைப்பினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை- கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாகவே மாகாண சபைத்தேர்தல் நடைபெறாமல் உள்ள விடயம் நம் அனைவருக்கும் தெரியும்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சேர்ந்து, இந்த மாகாண சபையினை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அல்லது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காகவும் செய்த சதி காரணமாகதான், இன்றும் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.

அந்தவகையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மீண்டும் அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சூழல் இருந்து கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் அல்லது கொரோனா முடிவடைந்ததும் தேர்தலை நடத்துங்கள் என மக்களை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு முனையக்கூடாது.

மேலும், மாகாண சபை தேர்தல் நடத்தப்படாதமைக்கு நாங்கள் தான் காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அந்த ஆட்சியில் பங்கெடுத்த அனைத்து கட்சிகளும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவ்வாறு மன்னிப்பு கேட்பதன் ஊடாகதான் எமது  மக்களை திருப்தி அடைய செய்து  கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *