கிளிநொச்சி – வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று (16) மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முழுமையான முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த 4 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 15 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி 15 பேரில் 10 பேர் நேற்றைய தினம் (16) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 பேர் நேற்று முன்தினமும் (15), அதற்கு மூன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
குறித்த பகுதியில் ஏறத்தாழ 300 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் முடக்கப்பட்டுள்ளனர்.
முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9 முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.