அஷ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – இங்கிலாந்து அணித்தலைவர்

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது.

இதையொட்டி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று(30) அளித்த பேட்டியில் கூறியதாவது:

“இந்திய அணி தலைவர் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் அவரை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்த வகையில் எல்லா பெருமையும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும்.

இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அடுத்து வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அப்போது தான் தொடரை வெல்ல முடியும்.

அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்டில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். அஷ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும்.

அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். போட்டியின் போது யார் பந்துவீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை, அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *