நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது – கூட்டமைப்பு கடும் கண்டனம் !

நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும் என்றும் ஜனாதிபதி அவர் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்கவும் அதற்கான சட்டவாக்கம் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் எனவும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ள காணொளியில், “நாட்டில் நேற்று நள்ளிரவிலிருந்து அவசரகால நிலமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு இது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டுக்கு ஆபத்திலிருந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும்.

இதனால்தான் பொதுமக்கள் பொது சுகாதார அவசரகாலச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

அதுதொடர்பாக தனிநபர் சட்டவரைவு ஒன்றையும் நான் நாடாளுமன்றில் முன்வைத்துள்ளேன். அதனை விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்றுவதாக அரசு அண்மையில் தீர்மானித்தது.

அவ்வாறிருக்கையில் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையிலே தற்போது அவசரகால நிலமை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன் ஆபத்து என்னவென்றால், இதனைத் தொடர்ந்து முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும்.

ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். சட்டவாக்கமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும். இதனை நாம் வலுவாகக் கண்டிக்கின்றோம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *