பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் கடமையாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு, பல காலமாக பாலியல் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் பொரள்ளை − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள வீட்டிலேயே இந்த சிறுமி கடமையாற்றி வந்துள்ளார்.
ஹட்டன் − டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, இடைதரகர் ஒருவரின் ஊடாக 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக கடமையாற்ற வந்துள்ளார்.
இவ்வாறு பணிப் பெண்ணாக வருகைத்தரும் சந்தர்ப்பத்தில், குறித்த சிறுமிக்கு 15 வயதும் 11 மாதங்களும் என விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, இப்பிரச்சினை முடிவிற்கு கொண்டுவர ரிஷாட் தரப்பில் இருந்து பல லட்ஷம் ரூபாய் பேரம் பேசல் இடம்பெற்று வருவதாகவும், அந்த வகையில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட் தரப்பினர் இருபது லட்ஷம் தருகிறோம் இப்பிரச்சினையை விட்டு விடுங்கள் என பேரம்பேசியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[embedded content]