மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 23 சிறுவர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இல்லத்திலுள்ள சிறுவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும் அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோது, 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில், மேலும் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சிறுவர் இல்லத்தில், 23 சிறுவர்களும் ஒரு விடுதி காப்பாளருமாக 24பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.