யாழில் 8 பேர் மரணம்-வெளியானது காரணம்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின்னர் உயிரிழந்தார் என்று முன்னர் செய்தி வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஒருவர் இல்லத்தில் உயிரிழந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் அவரது சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மின் தகனம் செய்யப்படும் என்று உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *