
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்த இருவரைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்துக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மைத்திரி பட்டியலிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ள நிலையில் அந்த சந்திப்பின்போது இவ்வகையான பிரச்சினைகள் பற்றி ஆழமாக பேச்சு நடத்தி தீர்மானங்கள் எடுக்கலாம் என்ற முடிவுக்கு இவ்விருவரும் வந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.