அனுமதியின்றி 5GB தொலைத்தொடர்பு கோபுரம் – அகற்றுமாறு மக்கள் கோரிக்கை!

கண்டாவளைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5GB தொலைத் தொடர்பு  கோபுரத்தை உடனடியாக அகற்றுமாறு கோரி அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவியின் ஏ-9 பிரதான வீதி அருகில் 5GB தொலைத்தொடர்பு கோபுரம்  ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை உடனே அகற்றுமாறு,  அந்தப்பகுதி மக்கள் ஊடக சந்திப்பொன்றை நிகழ்த்தி கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஊடக சந்திப்பில்  கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கையில், 

இப்பகுதியில் எமக்கு 5GB  தொலைத்தொடர்பு கோபுரம் தேவையில்லை.  அதனை இங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். இந்த தொலைத்தொடர்பு  எமக்கும் எமது உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  எமது சந்ததியையே அழித்துவிடும். 

இது தொடர்பாக பிரதேச செயலகத்தின் எந்தவித அனுமதியும் பெறவில்லை . அத்துடன் கிராம சேவையாளரின் அனுமதியும் பெறவில்லை.  பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை.அத்துடன் குறித்த தொலைத்தொடர்பு கோபுரம் யாரால் நிறுவப்பட்டது என்றும்  யார் அனுமதித்தது  என்றும் எமக்குத் தெரியாது. 

எனவே உடனடியாக தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.- என்றனர்.

Leave a Reply