இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


