மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில், தனித்தனி கட்சிகளாக செயற்படுவது எம்மை பலவீனப்படுத்துவதுடன் உரிய இலக்கை அடைய முடியாமல் போய்விடும் என மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை தொடர்பாக முக்கிய உரையொன்றினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கம் ஒரு பேச்சுக்காக தாங்கள் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென கூறுவதை நம்பி எவரும் ஏமாந்துவிடக் கூடாது என மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

மேலும் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும் ஒன்றுபட்டு, மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்ற விடயங்கள் தொடர்பாக எங்கள் மதிப்பீட்டை நாங்கள் அனுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *