யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வாமதேவன் கோகிலதேவ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மூன்று இளைஞர்கள் நேற்று மாலை குறித்த குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞன் தூண்டிலை குளத்தில் வீசியவேளை தூண்டில் முழுவதுமாக குளத்தில் விழுந்துள்ளது.
குறித்த இளைஞன் தூண்டிலை எடுப்பதற்கு குளத்தில் இறங்கியவேளை நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை கே.கே.எஸ் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

